×

அத்தியாவசிய பொருட்கள் விலையை கட்டுப்படுத்த நடமாடும் காய்கறி அங்காடி: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக மாநகராட்சி மற்றும் தோட்டக்கலை துறை மூலமாக நடமாடும் காய்கறி அங்காடிகளை அமைத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை, தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அதிகாரிகளிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கூட்டுறவுத் துறை சார்பாக தக்காளி விலையை கட்டுப்படுத்த சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்த வேண்டும். காய்கறி உள்ளிட்ட குறிப்பிட்ட வகை மளிகைப் பொருட்கள், அனைத்து கூட்டுறவு சங்க அங்காடிகளிலும், நியாயவிலைக் கடைகளிலும், சந்தை விலையை விட குறைவாக கிடைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இதற்கான கொள்முதல்களை மேற்கொள்ளலாம். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதை கடுமையாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் கவனம் செலுத்திடவும், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிடுகிறேன்.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேளாண் துறை அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தவேண்டும். கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல நடமாடும் காய்கறி அங்காடிகளை தற்போதும் தேவைப்படும் இடங்களில் மாநகராட்சி மற்றும் தோட்டக்கலை துறை மூலம் தொடங்க உத்தரவிடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கூட்டத்தில், மாநிலம் முழுவதும் செயல்படும் பண்ணை பசுமை அங்காடிகள் மூலம் கூடுதலாக தக்காளி, சிறியவெங்காயம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும், வெளிச்சந்தை விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போன்றவை சந்தை விலையைவிட குறைவான விலையில் விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும், 300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும், மாநிலம் முழுவதும் செயல்படும் உழவர் சந்தைகளில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் தக்காளி, சிறியவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு இருப்பு விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பதுக்கல் செய்வோர் மீது அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post அத்தியாவசிய பொருட்கள் விலையை கட்டுப்படுத்த நடமாடும் காய்கறி அங்காடி: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vegetable store ,CM G.K. Stalin ,Chennai ,Corporation ,Horticulture Department ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...